ஒன்று நீங்கலாக… – கவிதை

என்றோ தூக்கியெறிந்த

வேண்டாத பப்பாளி விதைகள்

மரங்களாக நிற்குமழகைக்

காணும்போதெல்லாம்

மண் பெருமை உணர்ந்தாலும்

வீட்டுக்குள் ஒருபிடி மண்ணில்லை

என்பதுவும்-

ஒரு காலத்தில்

நெல்லிக்கொம்பு மிதந்த கிணறு

தூர்வாரச்சொல்லி

பழம்பெருமையோடு மட்டும்

காத்திருத்தல்

காணும்போதும்-

இடதும் வலதுமாய்

தலையைத் திருப்பி

சொறிதலைக்

கடித்துச் சுகம் காணக் கடினப்படும்

வீட்டு நாயின்

தினக்குளியலும்-

பத்தாவது பக்கத்தில் பிரிந்து

காற்றில் பக்கங்கள் சடசடக்க

குப்புறக் கிடக்கும் புத்தக

நினைவும்-

செதுக்கிவைத்த தோல்வியெனினும்

தொடர்ந்துகொண்டே இருக்கின்றன

சில எத்தனங்கள், கூடவே

விதிவிலக்காய் இருந்து

குமைக்கின்றன

எல்லா இரவுகளும்

Share

Comments Closed